கொல்கத்தாவில் 4 நாட்கள் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழா நிறைவு


கொல்கத்தாவில் 4 நாட்கள் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 9 Nov 2019 8:16 PM GMT (Updated: 9 Nov 2019 8:16 PM GMT)

கொல்கத்தாவில் 4 நாட்கள் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நிறைவடைந்தது.

கொல்கத்தா,

மாணவர்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் கடந்த 5-ந் தேதி, 5-வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி தொடங் கிவைத்தார்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார், மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் ஆசுதோஷ் சர்மா, பூட்டான் நாட்டின் கல்வி மந்திரி ஜெய்பீர் ராய், மாலத்தீவு நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி மாலிக் ஜமால், மியான்மர் நாட்டின் கல்வி மந்திரி கின்மவுங் ஆய், கொரிய நாட்டின் தூதரக அதிகாரி ஜோய் ஜான் ஹோ, இங்கிலாந்து நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் லவ்ஹித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அறிவியல் திருவிழாவில் அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஜயானிகா என்ற இலக்கிய திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோருக்கு இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு என 28 வகையான வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 4 நாட்கள் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. இதில், 1,600 மாணவர்கள் தனித்தனியாக உருவாக்கிய ஸ்பெக்ட்ராஸ்கோப் கருவிகள் உள்பட 3 கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன், விஞ்ஞான பாரதி அமைப்பின் தலைவர் விஜய்பட்கர், மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுகையில், ‘மாணவர்கள் தங்கள் அருகாமையில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு சென்று அங்கு நடக்கும் ஆராய்ச்சிகளை பார்வையிட வேண்டும். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா அடுத்த ஆண்டு மேற்கு மாநிலங்களில் நடத்தப்படும்’ என்றார்.


Next Story