இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை - ராமர் கோவில் பணிகள் ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு


இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை - ராமர் கோவில் பணிகள் ஏப்ரலில் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2019 12:15 AM GMT (Updated: 10 Nov 2019 9:52 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக இரு தரப்பினருக்கு இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த பிரச்சினையின் மையப்பகுதியாக விளங்கி வந்த, உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி இடத்தின் உரிமை தொடர்பாக இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக 3 மாதங்களுக்குள் அறக் கட்டளை ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதேநேரம் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்காக நகரின் முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக இந்த தீர்ப்பை வெளியிட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பால் நீண்டகால பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என அனைத்து பிரிவினரும் அறிவித்து உள்ளனர். மேலும் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இந்த வழக்கின் மனுதாரர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்பதாக அறிவித்து இருந்தனர்.

இந்த தீர்ப்புக்குப்பின் நாட்டில் அமைதியை பராமரிப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்து, முஸ்லிம் தலைவர்களுடன் மத்திய அரசு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது.



 


  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாபா ராம்தேவ், மவுலானா எம்.மதானி, அவ்தேசானந்த் கிரி, சுவாமி பரமாத்மானந்தா மற்றும் ஏராளமான மத தலைவர்களும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்து, முஸ்லிம் தலைவர்கள் உறுதி அளித்தனர். குறிப்பாக, தற்போதைய சூழலை பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் நாட்டு நலனை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்று அச்சம் வெளியிட்ட அவர்கள், இந்த நடவடிக்கைகளுக்கு யாரும் இடம் கொடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் சார்பாக பின்னர் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதில், “இந்த தீர்ப்பை எந்த தரப்புக்கும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டின் நலனுக்கான தீர்ப்பாகவே கருத வேண்டும். இதை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பல்வேறு சமூகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் தொடர வேண்டும் என தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தியதாகவும், உயர்மட்ட மத தலைவர்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு இந்த சந்திப்பு உதவியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட பணிகளை மத்திய-மாநில அரசுகளும், வழக்கில் தொடர்புடைய அமைப்புகளும் தொடங்கி உள்ளன. அதன்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக விஸ்வ இந்து பரிஷத், ராமஜென்மபூமி நியாஸ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்து உள்ளன.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த காலத்திலேயே ராமர் கோவிலுக்கான கட்டுமான பொருட்களை ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பினர் சேகரித்து வந்தனர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கான தூண்களை தயார் செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வந்தது.

அங்கு 270 அடி நீளம், 128 உயரம், 140 அடி அகலத்தில் பிரமாண்டமான முறையில் கோவில் அமைய உள்ளது. முற்றிலும் கைவேலைப்பாடுகள் நிறைந்த சலவைக்கற்கள் மூலம் கட்டப்பட உள்ள இந்த கோவிலில் 5 வாசல்கள், 212 தூண்கள் அமைக்கப்படு கின்றன. இரும்பை பயன்படுத்தாமல் இந்த கோவில் கட்டப்படுவது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கோவிலுக்கான தூண்களில் பாதிக்கு மேல் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கும் நிலையில், மீதமுள்ள தூண் களையும் சலவைக்கல்லில் செதுக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்கு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என கருதப்படுகிறது.

ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் குறித்து விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறும்போது, ‘கோவில் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்த கால வரையறையை என்னால் கூற முடியாது. ஆனால் சட்ட நடைமுறைகள் அனைத்தையும் முடித்து விட்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கோவில் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

பிரபல கட்டிட கலை நிபுணர் சோம்புரா ராமர் கோவில் கட்டிடத்தை 1989-ம் ஆண்டு வடிவமைத்து இருப்பதாகவும், அந்த வடிவமைப்பின்படி கோவிலை கட்ட வேண்டும் என்றும் அலோக்குமார் கேட்டுக் கொண்டு உள்ளார்.

கோவில் கட்டும் பணி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவதால், அதையொட்டி கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story