வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
வெங்காய உற்பத்தியில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதும் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இரு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெங்காயப் பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்து அதன் விலை உயர்ந்தது.
இதனையடுத்து வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.
இந்த நிலையில், நாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, சண்டிகர், மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story