எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் சரத்பவாருடன் சேருங்கள்; காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது - ஆம் ஆத்மி கோபம்
மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தேசியவாத காங்கிரசில் சேருங்கள். காங்கிரஸ் அழிவதற்கான நேரம் இது என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா மேனன் கூறி உள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், சிவசேனாவின் பிடிவாதம் காரணமாக, பாஜகவால் ஆட்சியமைக்க இயலாமல் போனது. இதனால், கால் நூற்றாண்டு காலம் நீடித்த, பாஜக-சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
பா.ஜ.க.வுடன் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்துவருகிறது. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க தேசியவாத காங்கிரஸ் ஒப்புக்கொண்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளிக்க தயக்கம் காட்டிவருகிறது. அதனையடுத்து, மராட்டிய மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி பிரீத்தி சர்மா மேனன், ‘காங்கிரஸ் கட்சியின் தலைமை அவர்களுடைய கட்சியை தேசத்தை விட முன்னதாக நிறுத்துகிறது. மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை பிடிவாதமாக மறுத்து பா.ஜ.க. வெற்றிபெற உதவியது.
தற்போது, மராட்டியாவை பா.ஜ.க.வுக்கு அளித்து வருகிறார்கள். அவர்களுடைய பிடிவாதம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அது அழியும். மராட்டியத்திலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாருடன் இணைய வேண்டும். இது காங்கிரஸ் அழிவதற்கான நேரம்’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Congress MLAs in Maharashtra should join @PawarSpeaks. It's really time for Congress to die.
— Preeti Sharma Menon (@PreetiSMenon) 12 November 2019
.@INCIndia leadership always puts their party before the Nation. In Loksabha they stubbornly refused regional alliances and helped BJP sweep. Now they are giving #Maharashtra on a platter to BJP. It's moribund attitude will decimate it soon.
— Preeti Sharma Menon (@PreetiSMenon) 12 November 2019
Related Tags :
Next Story