சந்திரயான்-3 : அடுத்த ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டம்


சந்திரயான்-3 : அடுத்த ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2019 8:32 AM GMT (Updated: 14 Nov 2019 8:32 AM GMT)

2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் சந்திரயான்-3 விண்கலம் மூலம் செல்லும் லேண்டரை நிலவின் தென்பகுதியில் தரை இறக்க உள்ளதாக இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் வகையில், சந்திரயான் 2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.  விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்த சமயத்தில், திடீரென அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

கட்டுப்பாட்டை இழந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாய்ந்த நிலையில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பலமுறை முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. 

இந்த நிலையில்,  வரும் ஆண்டு இறுதியில் சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தி மீண்டும் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சந்திரயான்-3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.  

சந்திரயான்-3ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், எந்த கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறனுடனும் வடிவமைக்கப்படும். சந்திரயான்-2 திட்டத்தில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டு, சரி செய்யப்படும் என்று  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்டுள்ள சந்திரயான் -3 திட்டம் குறித்து அறிக்கை தயார் செய்ய  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் சோம்நாத் தலைமையில் உயர்மட்டக்குழுவை இஸ்ரோ அமைத்துள்ளது என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

Next Story