முதல்-மந்திரி பதவி பகிர்வு குறித்த முடிவில் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாரோ? - சஞ்சய் ராவத்


முதல்-மந்திரி பதவி பகிர்வு குறித்த முடிவில் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாரோ? - சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 14 Nov 2019 9:48 AM GMT (Updated: 14 Nov 2019 9:48 AM GMT)

பாஜகவின் உயர்மட்ட தலைவர்களால் முதல்-மந்திரி பதவி பகிர்வு குறித்த முடிவில் இருந்து, மோடி "ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாரோ?" என வியப்பாக இருக்கிறது என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளால்  அதிகார பங்கு மோதலால் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது. 

ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷியாரி 3-வது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால்  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என கூறி வரும் சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.

சிவசேனா மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்  இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-மந்திரி பதவியில் பங்கு தரும் உடன்படிக்கை குறித்து சரியான நேரத்தில் தெரிவித்திருந்தால், மராட்டிய மாநிலத்தில்  தற்போதைய அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்காது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும், எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே நடந்த உடன்பாடு தனிப்பட்ட முறையில் நடந்தது. தேவேந்திர பட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என்று பிரதமர் பலமுறை பொது மேடையில் பேசியதை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.

பாஜகவின் உயர்மட்ட தலைவர்களால் முதல்-மந்திரி பதவி பகிர்வு குறித்த முடிவில் இருந்து, மோடி  "ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளாரோ?" என வியப்பாக இருக்கிறது. 

மூடப்பட்ட அறைக்குள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால்தான் அது வெளியே வரும். நாங்கள் அரசியலில் ஒருபோதும் வியாபாரம் செய்தது இல்லை. அரசியலை லாபம், நஷ்டம் என்ற அடிப்படையில் பார்த்தது இல்லை என கூறினார். 

Next Story