மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்குத்தான் - தேசியவாத காங்கிரஸ்


மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்குத்தான் - தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:12 AM GMT (Updated: 15 Nov 2019 10:12 AM GMT)

மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்குத்தான் என தேசியவாத காங்கிரஸ் உறுதி அளித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால், ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சிகளால் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை. கவர்னர் விதித்த கெடுவுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த செவ்வாய்க்கிழமை மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதா அமைதி காத்து வரும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்களை நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேசினார். 

இந்துத்வா கொள்கையை கடைபிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கை கொண்ட காங்கிரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மராட்டியத்தில் புதிய கூட்டணி உருவாவது உறுதியானது. ஆட்சியமைக்க கவர்னரிடம் உரிமை கோரும் முன்பு 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன. 40 அம்சங்கள் கொண்ட  குறைந்தபட்ச செயல் திட்டம் இறுதி வடிவம் பெற்று உள்ளது. 

குறைந்தபட்ச செயல்திட்டம் இறுதி வடிவம் பெற்றதால் தற்போது அதிகார  பகிர்வு குறித்து பேசப்பட்டது. சிவசேனாவுக்கு 16 அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரசுக்கு  14 மற்றும் காங்கிரசுக்கு 12  என ஒரு பரந்த ஒருமித்த கருத்து உருவாகி வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா அரசில் முதல்-மந்திரி பதவி சிவசேனாவுக்குச் செல்லும். முதல்வர் சிவசேனாவைச் சேர்ந்தவர்.  முதலமைச்சர் பதவி தொடர்பாகத்தான் முந்தைய கூட்டணி விலகிச் சென்றது. அதன் உணர்வை மதிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. காங்கிரஸ் அதன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என கூறினார்.

Next Story