மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்


மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 16 Nov 2019 2:11 AM GMT (Updated: 16 Nov 2019 2:11 AM GMT)

மும்பை ஆரே காலனியில் மரங்கள் வெட்ட விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

புதுடெல்லி,

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இது சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மரங்கள் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சாா்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுக்களை  மும்பை உயா்நீதிமன்றம் கடந்த அக்டோபரில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் குழு  கடிதம் அனுப்பியது.  இந்த கடிதத்தின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக முன்வந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஆரே காலனியின் மேற்கொண்டு மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். எனினும், அங்கு மெட்ரோ ரயில் பணிமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் விளக்கமளித்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்த நீதிபதிகள், இந்த வழக்கில் டிசம்பா் மாதம் விரிவாக விசாரணை நடைபெறும் என்றனர்.


Next Story