நடுத்தர வகுப்பினருக்கு சுகாதார திட்டம் - பில் கேட்ஸ் முன்னிலையில் நிதி ஆயோக் அறிவிப்பு


நடுத்தர வகுப்பினருக்கு சுகாதார திட்டம் - பில் கேட்ஸ் முன்னிலையில் நிதி ஆயோக் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 10:17 PM GMT)

நடுத்தர வகுப்பினருக்கு சுகாதார திட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக பில் கேட்ஸ் முன்னிலையில் நிதி ஆயோக் அமைப்பு அறிவித்தது.

புதுடெல்லி,

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத்தலைவர் பில் கேட்ஸ், இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று டெல்லியில் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் ‘புதிய இந்தியாவுக்கான சுகாதார திட்டம்’ என்ற அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமாருடன் இணைந்து அந்த அறிக்கையை பில் கேட்ஸ் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், நிதி ஆயோக் ஆலோசகர் (சுகாதாரம்) அலோக் குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற சுகாதார திட்டம், ஏழை மக்களுக்காக உள்ளது. 50 கோடி பேர் அதில் பலன் அடையலாம். பணக்காரர்கள், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், நடுத்தர வகுப்பினருக்குத்தான் பொது சுகாதார திட்டம் எதுவுமே இல்லை. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி, மருத்துவ செலவுகளுக்கே சரியாகி விடுகிறது. எனவே, அவர்களுக்காக ஒரு சுகாதார திட்டம் தொடங்க நிதி ஆயோக் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்துக்காக, ரூ.200 அல்லது ரூ.300 செலுத்துவது நடுத்தர வகுப்பினருக்கு சுமையாக இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பில்கேட்ஸ் பேசுகையில், இளம் தலைமுறை காரணமாக, இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று கூறினார்.

பிரதமர் மோடியையும் அவர் சந்தித்து பேசினார்.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தனை பில் கேட்ஸ் சந்தித்தார். அப்போது, அவர்கள் முன்னிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், பில் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்துதல், பிரசவ மரணங்களை கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குதல் உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் பணிகளுக்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை உதவும்.


Next Story