மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் - சரத்பவாரை சந்தித்த பின் சஞ்சய் ராவத் பேட்டி


மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் - சரத்பவாரை சந்தித்த பின் சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:15 PM GMT (Updated: 19 Nov 2019 10:07 PM GMT)

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சரத்பவாரை சந்தித்த பின் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதில் சிவசேனா தீவிரமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். அப்போது, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என கருதப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியாகாந்தியிடம் பேசவில்லை என சரத்பவார் கூறினார்.

இதனால் புதிய அரசு அமைவதில் மீண்டும் குழப்பம் நிலவிய நிலையில், சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் திடீரென சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களை சந்தித்த சஞ்சய் ராவத், மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது துயரத்தை துடைக்க முன்னாள் மத்திய வேளாண் மந்திரி மற்றும் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் மாநில தலைவர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி பிரதமரை சந்திக்க வேண்டும் என சரத்பவாரை கேட்டுக் கொண்டேன்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக சரத்பவாரிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என்று மட்டும் சஞ்சய் ராவத் கூறினார். மற்றபடி எதையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.


Next Story