சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களுடன் சந்திப்பு


சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 23 Nov 2019 5:43 AM GMT (Updated: 23 Nov 2019 5:43 AM GMT)

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகின்றனர்.

புனே,

மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது.  இந்த தேர்தலின் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

எனினும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.  இதனால் கடந்த 12ந்தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்து கொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தென்மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (முதல்-மந்திரி) தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு தலைமை வகிப்பது யார்? என்ற பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது. இனி மற்ற விஷயங்கள் குறித்து பேசப்படும்” என்றார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.

இது காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  எனினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் பட்டேல், இது எங்கள் கட்சியின் முடிவல்ல.  இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகின்றனர்.

Next Story