தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது; சிவசேனாவுடன் இணைந்து செயல்படுவோம்-சரத்பவார்


தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது; சிவசேனாவுடன் இணைந்து செயல்படுவோம்-சரத்பவார்
x
தினத்தந்தி 23 Nov 2019 7:48 AM GMT (Updated: 23 Nov 2019 7:51 AM GMT)

தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது ; சிவசேனாவுடன் இணைந்தே செயல்படுவோம் என சரத்பவார் கூறினார்.

மும்பை

மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது.  இந்த தேர்தலின் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

எனினும், கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.  இதனால் கடந்த 12ந்தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவுடன் சுமார் 30 ஆண்டு கால கூட்டணி உறவை முறித்து கொண்ட சிவசேனா தனது தலைமையில் புதிய அரசு அமைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை 3 கட்சி தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க  சந்தித்து பேசினர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல் மந்திரியாக அஜித் பவார் இன்று காலை பதவியேற்று கொண்டனர். இது கட்சியின் முடிவு அல்ல அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என சரத்பவார் கூறி இருந்தார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-

சிவசேனா மற்றும் என்.சி.பி தலைவர்கள் ஒன்றிணைந்து அரசை  உருவாக்க திட்டமிட்டோம் . எங்களுக்கு ஆட்சி அமைக்க தகுந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.  எங்களிடம் 170  எம்.எல்.ஏக்கள் இருந்தனர். பாஜக ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் கிடையாது.

நேற்று நடந்த கூட்டத்தின்போதே அஜித்பவார் வெளியேறி விட்டார்.

இன்று நடந்த நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அஜித்பவாருடன் 12 எம்.எல்.ஏக்கள் மட்டும் தான் சென்று உள்ளனர். இன்று காலை அஜித் பவார் அனைத்து எம்.எல் ஏக்களையும் அழைத்து உள்ளார். போகும் அனைத்து எம்.எல்.ஏக்களும்  கடசி தாவல் தடை  சட்டம் இருப்பதையும், அவர்கள் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் வாய்ப்பு அதிகம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது. இந்த விவகாரத்தில் சிவசேனாவுடன் இணைந்தே செயல்படுவோம்.

கவர்னர்  மாளிகையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு  தெரியாது.  அஜித் பவார் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். அஜித் பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது மற்றும் ஒழுக்கமற்றது. எந்த தேசியவாத காங்கிரஸ்  தலைவரும் அல்லது தொண்டரும் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைய விரும்ப மாட்டார்கள். இன்று மாலை 4 மணிக்கு புதிய என்சிபி சட்டமன்றக் கட்சித் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

கவர்னர்  பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடியாது. அதன்பிறகு நாங்கள் முன்னர் தீர்மானித்தபடி எங்கள் மூன்று கட்சிகளும் அரசாங்கத்தை அமைக்கும்.

குதிரை பேரம் மூலமாக ஆட்சி அமைத்துள்ளது பாஜக. எங்களுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட  எம்எல்ஏக்களின் பட்டியல் கவர்னரிடம் இருந்தது  போலவே அஜித் பவாரிடமும் இருந்தது; அந்த  பட்டியலை பாஜகவிடம் அஜித் பவார் சமர்பித்திருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்என கூறினார்.

Next Story