மராட்டிய அரசியல் விவகாரம்; 3 கட்சிகளின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


மராட்டிய அரசியல் விவகாரம்; 3 கட்சிகளின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 23 Nov 2019 4:29 PM GMT (Updated: 23 Nov 2019 4:29 PM GMT)

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங். உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை நாளை காலை 11.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

புதுடெல்லி,

மராட்டியத்தில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்-மந்திரி பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கிய நிலையில்,  திடீர் திருப்பமாக மராட்டிய முதல்-மந்திரியாக 2-வது முறையாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரியாக அஜித் பவாரும் பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என விளக்கமளித்திருந்தார். அஜித் பவாரின் இந்த திடீர் முடிவால் மராட்டிய அரசியலில் இன்று மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது. 

இந்தநிலையில், மராட்டியத்தில் முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும்,  துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் ஆகிய இருவரையும் பதவி ஏற்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைத்ததை எதிர்த்தும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தன. இந்த மனுவை நாளை காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரிக்க உள்ளது.

Next Story