பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை


பீகாரில் பட்டப்பகலில் பயங்கரம்: நிதி நிறுவனத்தில் 55 கிலோ தங்கம் கொள்ளை - துப்பாக்கிமுனையில் கைவரிசை
x
தினத்தந்தி 23 Nov 2019 8:45 PM GMT (Updated: 23 Nov 2019 7:57 PM GMT)

பீகாரில் பட்டப்பகலில், நிதி நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் 55 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பாட்னா,

கேரள மாநிலம், கொச்சியை தலைமையகமாக கொண்டு செயல்படுவது முத்தூட் நிதி நிறுவனம். தங்க நகை அடமானத்தின்பேரில் கடன் வழங்குவதில் இந்த நிறுவனம், முன்னணியில் உள்ளது. இதன் கிளைகள் கேரளா, தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் உள்ளன. பீகார் மாநிலம், ஹாஜிப்பூர் நகரத்தில் சினிமா சாலையில் இதன் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல இந்த கிளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் பலரும் அங்கு வந்திருந்தனர்.

இந்த நிலையில் மதியம் சுமார் 12.30 மணிக்கு, பட்டப்பகலில் 7 கொள்ளையர் துப்பாக்கிகளுடன் அங்கு சென்றனர். வாயிலில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு திபுதிபுவென நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்ததும் அங்கு பணியில் இருந்தவர்களும், வாடிக்கையாளர்களும் பதறிப்போயினர். அந்த நிறுவனத்தின் நிர்வாகியை கட்டிப்போட்டனர். ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் கொள்ளையர்கள் துப்பாக்கிமுனையில் பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

இதையடுத்து அங்கு இருந்த 55 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அவற்றை தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த பைகளில் நிரப்பிக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர்.

பதற்றத்தில் இருந்து மீண்ட உடன் அந்த நிறுவனத்தின் நிர்வாகி, டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.21 கோடி என தகவல்கள் கூறுகின்றன.

இந்த கொள்ளை சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story