கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்கும் அயோத்தி நகராட்சி


கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர்  வாங்கும் அயோத்தி நகராட்சி
x
தினத்தந்தி 25 Nov 2019 6:45 AM GMT (Updated: 25 Nov 2019 6:45 AM GMT)

கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வாங்க அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ

பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் உத்தரபிரதேச மாநிலத்தில் பைசிங்பூரில் முதற்கட்டமாக ஆயிரத்து 200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பளி, கையுறைகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350  ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.

அயோத்தியின் நகர் நிகாம் ஆணையர் நிராஜ் சுக்லா கூறியதாவது:-

நாங்கள் பசுக்களுக்கு கோட்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டம் மூன்று நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதலாவதாக, நாங்கள் பைஷிங்பூரில் பசுக்கள் தங்குமிடத்தில் தொடங்குகிறோம், இதில் 700 காளைகள் உட்பட 1,200 கால்நடைகள் உள்ளன, மீதமுள்ளவை மாடுகள் மற்றும் கன்றுகள். கன்றுகளுக்கு 100 கோட்டுகளுக்கு ஆரம்பத்தில் ஆர்டர்  கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மாட்டு கோட்டுக்கும் 250-300 ரூபாய் செலவாகும் என கூறினார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத மாநில அரசு, தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுக்க முன் வருகிறது என்று விமர்சித்துள்ளது.

Next Story