எங்களுக்கு 30 மணி நேரம் தேவையில்லை 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் -சஞ்சய் ராவத்


எங்களுக்கு 30 மணி நேரம் தேவையில்லை 30  நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் -சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 26 Nov 2019 7:20 AM GMT (Updated: 26 Nov 2019 7:20 AM GMT)

எங்களுக்கு 30 மணி நேரம் தேவையில்லை 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம்  கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வீடியோ பதிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா  கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

தீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திர  பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் ஜே.டபிள்யூ மேரியட் ஓட்டலில் நடந்து வருகிறது. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, பாலாசாகேப் தோரத் மற்றும் அசோக் சவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மராட்டிய காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

"பணபலம், உடல் வலிமையைக் காட்டிலும் அரசியலமைப்புச் சட்டம் வலிமையானது. சுப்ரீம் கோர்ட்  உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் 162 எம்எல்ஏக்கள் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரச்  தலைவர் சரத் பவார் மற்றும் கட்சித் தலைவர் நவாப் மாலிக் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறும்போது, 

மராட்டிய சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்  உத்தரவு இந்திய ஜனநாயகத்தின் மைல்கல். 5 மணிக்கு முன்பாகவே பாஜகவின் விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். சில நாட்களில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணி ஆட்சி மரட்டியத்தில்  உதயமாகும்" எனத் தெரிவித்தார்.
 
இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது:-

பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்  30 மணி நேரத்தை வழங்கியுள்ளது. எங்களால் 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றார்.

Next Story