அஜித் பவார் எங்களுடன் உள்ளார் ; உத்தவ் தாக்கரே முதல்வராக 5 ஆண்டுகள் இருப்பார் -சஞ்சய் ராவத்
அஜித் பவார் எங்களுடன் உள்ளார். உத்தவ் தாக்கரே மராட்டிய மாநில முதல்வராக 5 ஆண்டுகள் இருப்பார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை
மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.
இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மராட்டிய சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தீர்ப்பை தொடர்ந்து மும்பை இல்லத்தில் முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிசுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் பதவி விலகி உள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் கூறும்போது,
அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளார், அவரும் எங்களுடன் இருக்கிறார். உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் முதல்வராக 5 ஆண்டுகள் இருப்பார் என கூறினார்.
Related Tags :
Next Story