நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு; சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்


நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு; சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 12:14 AM GMT)

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட தின கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

புதுடெல்லி,

அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதன் 70-வது ஆண்டு விழாவையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடைபெற்றது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதற்கு தலைமை தாங்கினார்.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்த வழிமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே அரசியல் சட்டத்தில் இருந்து சில பகுதிகளை சோனியா காந்தி வாசித்தார். அரசியல் சட்டத்தின் ஆன்மாவை கட்டிக்காக்க உறுதி பூண்டுள்ளதாக அவர் மற்ற தலைவர்களுக்கு உறுதிமொழி செய்து வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘ஜனநாயக படுகொலையை நிறுத்துங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளையும், பேனர்களையும் கையில் பிடித்திருந்தனர். பா.ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

மும்பை தாக்குதல் நினைவுதினத்தையொட்டி, அச்சம்பவத்தில் பலியானோருக்கு அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story