பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Nov 2019 10:15 PM GMT (Updated: 26 Nov 2019 8:35 PM GMT)

பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரம் என குறைத்தது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது.

அதேபோல பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பா.வினோத் கன்னா, பட்டாசு தொழிற்சாலைகள் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, குறைந்த அளவில் பேரியத்தை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கும் புதிய சூத்திரம் கடந்த ஆகஸ்டு மாதம் உருவாக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளால் மாசு 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பட்டாசுக்கு தடை கோரும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஏற்கனவே பேரியத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அதனை நீக்கும் வகையில் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து பேரியம் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

தொடர்ந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் சோதனை அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று கூறினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த சோதனை அமைப்பை உருவாக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

இதற்கு வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பா.வினோத் கன்னா ஆகியோர் தமிழ்நாட்டில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வழியாக இந்த தரக்கட்டுப்பாட்டு அமைப்பை பட்டாசு தொழிற்சாலைகளில் நிறுவலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கள் தொழிற்சாலைகளில் எப்படி செயல்படுத்தப்போகின்றன என்று 15 நாட்களில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story