சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடு வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.
நீதிமன்றக்காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றொரு முக்கிய வழக்கில் ஆஜராவதால், விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைக்குமாறு அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை இன்று (புதன்கிழமை) ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story