ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு ; ப.சிதம்பரத்தின் காவல் டிசம்பர் 11-ந் தேதி வரை நீட்டிப்பு


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு ; ப.சிதம்பரத்தின் காவல் டிசம்பர் 11-ந் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 11:04 AM GMT (Updated: 27 Nov 2019 11:04 AM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை டிசம்பர் 11-ந் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி.  உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க தனிக்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.  இதனை தொடர்ந்து, திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரிய அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11ந் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story