உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பாரா?


உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பாரா?
x
தினத்தந்தி 28 Nov 2019 4:50 AM GMT (Updated: 28 Nov 2019 4:50 AM GMT)

மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார்.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

அவசரகதியில் பதவி ஏற்ற பாரதீய ஜனதா அரசின் ஆயுள் வெறும் 4 நாட்களில் முடிந்து போனது. இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. இதைத்தொடர்ந்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.  மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சூழலில், உத்தவ் தாக்கரே  பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா? என்று சோனியா காந்தியிடம் கேட்ட போது, ”இன்னும் அது பற்றி முடிவு செய்யவில்லை” என்றார்.

Next Story