உள்ளாட்சி தேர்தல் : சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. புதிய மனு


உள்ளாட்சி தேர்தல் : சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. புதிய மனு
x
தினத்தந்தி 28 Nov 2019 11:30 PM GMT (Updated: 28 Nov 2019 9:52 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

புதுடெல்லி, 

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் கடந்த 2016-ம் ஆண்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தேர்தல் பணிகளை மாநில அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வக்கீல் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவுடன் சேர்ந்து வருகிற டிசம்பர் 13-ந் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தி.மு.க. தரப்பில் இந்த வழக்கில் புதிதாக கூடுதல் மனு ஒன்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் திடீரென்று 9 புதிய மாவட்டங்களை புதிதாக அறிவித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறையிலான ஒதுக்கீடு ஆகிய சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story