மராட்டிய இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சி பாட்டீல் நியமனம்


மராட்டிய இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சி பாட்டீல் நியமனம்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:33 AM GMT (Updated: 29 Nov 2019 11:33 AM GMT)

மராட்டிய இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சி பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போன நிலையில், கடந்த 12ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்காக கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ‘மகா விகாஷ் முன்னணி' என்ற கூட்டணியை அமைத்தது.

ஆனால், 23ந்தேதி எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவாரை தன் பக்கம் இழுத்து பாரதீய ஜனதா திடீர் அரசாங்கத்தை அமைத்தது. இதை எதிர்த்து சிவசேனா கூட்டணி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட அடுத்த சில மணி நேரத்தில், துணை முதல்-மந்திரி பதவி வகித்த தேசியவாத காங்கிரசின் அஜித்பவார், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினர். இதன் மூலம் பாரதீய ஜனதா அரசாங்கத்தின் ஆயுள் 4 நாட்களில் முடிந்தது.

இதன்பின்பு மகா விகாஷ் அகாடி கூட்டணி சார்பில், முதல்-மந்திரி பதவிக்கு  சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே (வயது 59) தேர்வு செய்யப்பட்டார்.  சிவாஜி பூங்காவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரியாக அவர் பதவியேற்று கொண்டார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

இதனை தொடர்ந்து இன்று முறைப்படி முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், மராட்டிய இடைக்கால சபாநாயகராக தேசியவாத காங்கிரசின் திலீப் வல்சி பாட்டீல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து, மராட்டிய சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story