அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு: ஸ்ரீ ரவிசங்கரும் எதிர்ப்பு - ‘இரட்டை நிலைப்பாடு’ என சாடல்


அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு: ஸ்ரீ ரவிசங்கரும் எதிர்ப்பு - ‘இரட்டை நிலைப்பாடு’ என சாடல்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:01 PM GMT)

அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல் இரட்டை நிலைப்பாடு என்று ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் அறிவித்துள்ளன. இதற்கு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் முயற்சி என அவர் விமர்சித்தார்.

இதேபோன்று அயோத்தி பிரச்சினையில் சமரச தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவில் இடம் பெற்றிருந்த ஆன்மிக குருவும், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீரவிசங்கரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இது குறித்து நேற்று அவர் கருத்து கூறும்போது, “ஒரு முடிவு அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்காது என்பது இயல்பானதுதான். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று முதலில் சொன்னவர்கள், இப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, மறுஆய்வு மனுதாக்கல் செய்வோம் என்கின்றனர். இது இரட்டை நிலைப்பாடு” என கூறினார்.

அத்துடன், “ இந்துக்களும், முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பாடுபட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story