அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்


அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:42 AM GMT (Updated: 2 Dec 2019 8:28 PM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் அமைப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கே வழங்க உத்தரவிட்டது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால், சன்னி வக்பு வாரியம், சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் அமைப்பு ஒன்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஜமியத் உலமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது அஷாத் ரஷிதி, இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர், அயோத்தி வழக்கின் பிரதான மனுதாரரான எம்.சித்திக்கின் சட்டப்பூர்வ வாரிசு ஆவார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஒட்டுமொத்த தீர்ப்பையும் எதிர்க்கவில்லை. ஆவண ஆதாரங்களை புறக்கணித்து இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்து தரப்பின் சட்டவிரோத காரியங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

முஸ்லிம் தரப்பு கேட்காத நிலையிலேயே 5 ஏக்கர் நிலம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுகள் அப்பட்டமாக காணப்படுகின்றன. ஆகவே, தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, விசாரணைக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை. 9-ந் தேதிக்கு பிறகு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.


Next Story