உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. மனு மீது 5-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. மனு மீது 5-ந் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 8:41 PM GMT (Updated: 2 Dec 2019 8:41 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தி.மு.க. மனு மீது வருகிற 5-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டுகள் மறுவரையறை செய்து, சுழற்சி முறை இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாட்டை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தேர்தல் பணிகளை மாநில அரசு ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் மத்திய அரசு ஊழியர்களை கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரி தி.மு.க. சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை, ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வக்கீல் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவுடன் வருகிற டிசம்பர் 13-ந் தேதியன்று விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் திடீரென்று 9 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை, சுழற்சி முறையிலான ஒதுக்கீடு ஆகிய சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் இன்று (அதாவது நேற்று) காலை அறிவித்து இருப்பதால், தாங்கள் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தி.மு.க.வின் மனுவை வருகிற 5-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

தி.மு.க.வின் இந்த மனுவுடன் ஏற்கனவே இதே கோரிக்கையுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்துள்ள மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story