சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் -காங்கிரஸ் எதிர்ப்பு


சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் -காங்கிரஸ் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 12:48 PM GMT (Updated: 3 Dec 2019 1:58 PM GMT)

சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்த) எஸ்பிஜி மசோதாவுக்கு மாநிலங்களவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த வாரம்  மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த எஸ்பிஜி மசோதா மீதான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வகுப்புவாத சக்திகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என கூறினார்.

திமுக உறுப்பினர் பி.வில்சன் பேசும்போது, ஒரு குடும்பத்தை மட்டுமே குறிவைப்பதால் இந்த மசோதாவை எதிர்ப்பதாக கூறினார்.  சட்டமன்றம் அச்சுறுத்தலை எவ்வாறு உணர முடியும், ஒரு திறமையான அதிகாரத்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என  கூறினார்.

இந்த மசோதாவை எதிர்த்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். காந்தி குடும்ப உறுப்பினர்களின் எஸ்பிஜி பாதுகாப்பை அகற்றும் நோக்கத்திற்காக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 

காந்தி குடும்பத்தை மட்டுமே மனதில் வைத்து நாங்கள் எஸ்பிஜி மசோதாவைக் கொண்டு வந்தோம் என்பது உண்மையல்ல. இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன்பே அச்சுறுத்தல் மதிப்பீட்டு பகுப்பாய்வுக்குப் பின்னர் அவர்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

இது எஸ்பிஜி சட்டத்தின் 5-வது திருத்தமாகும். இந்த திருத்தம் காந்திகளை மனதில் வைத்து கொண்டு வரப்படவில்லை, ஆனால், நான் உறுதியாக சொல்லக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், முந்தைய நான்கு திருத்தங்கள் ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே மனதில் வைத்து செய்யப்பட்டன.

எஸ்பிஜி பாதுகாப்பை ஏன் கோருகிறார்கள்? எஸ்பிஜி பாதுகாப்பு  அனைவருக்கும் கொடுக்க முடியாது. நாங்கள் ஒரு குடும்பத்தை  எதிர்க்கவில்லை, நாங்கள் வம்ச அரசியலுக்கு எதிரானவர்கள்.

பிரியங்கா காந்தியின் வீட்டில் பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்குப் பின்னால் எந்த அரசியலும் இல்லை. நாட்டின் முழு பாதுகாப்பும் அரசின் பொறுப்பு  என்று கூறினார்.

பிரதமர் மற்றும் அவருடன் அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் அவரது  குடும்ப உறுப்பினர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் என்று கடந்த வாரம் அமித் ஷா மக்களவையில் தெரிவித்திருந்தார்.

Next Story