பிரியங்கா வீட்டுக்குள் கார் சென்ற விவகாரம்: 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் - உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு


பிரியங்கா வீட்டுக்குள் கார் சென்ற விவகாரம்: 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் - உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:00 PM GMT (Updated: 3 Dec 2019 8:39 PM GMT)

பிரியங்கா வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி கார் சென்ற விவகாரத்தில், 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். உயர்மட்ட விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. என்னும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்த பாதுகாப்பை மத்திய பாரதீய ஜனதா அரசு சமீபத்தில் அதிரடியாக ரத்து செய்தது.

இதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதே நேரத்தில், சோனியா காந்தியின் குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சினையை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு கார் சென்ற விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே எஸ்.பி.ஜி. சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று விவாதத்துக்கு வந்தது. அப்போது சோனியா காந்தி குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கவலை தெரிவித்தனர்.

இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அவர் நடந்த சம்பவத்தையும், அதையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையையும் விவரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி பிரியங்கா காந்தி வீட்டுக்கு கருப்பு நிற டாடா சபாரி காரில் ராகுல் காந்தி வரப்போவதாக அங்கு பாதுகாப்பு பணிகளை கவனித்து கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த நேரத்தில் ஒரு டாடா சபாரி கார் உள்ளே நுழைந்துள்ளது. அது ராகுல் காந்தியின் கார் என கருதி மத்திய ரிசர்வ் படையினர் நிறுத்தாமல் உள்ளே செல்ல அனுமதித்து விட்டனர். இது தற்செயலாக நடந்து இருக்கிறது.

அந்த காரில் வந்தது மீரட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சாரதா தியாகியும், அவருடன் வந்த அந்த கட்சி தொண்டர்கள் 4 பேரும்தான்.

இந்த பிரச்சினையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உயர்மட்ட விசாரணைக்கும் மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த தவறும் நடப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story