பீகாரில் கொடூரம்; இளம்பெண் கற்பழித்து, துப்பாக்கியால் சுட்டு எரித்து கொலை
தெலுங்கானாவை தொடர்ந்து பீகாரில் இளம்பெண் ஒருவர் மர்ம கும்பலால் கற்பழித்து, துப்பாக்கியால் சுடப்பட்டு, எரித்து கொல்லப்பட்டு உள்ளார்.
பக்சார்,
தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பீகாரில் மற்றொரு சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
பீகாரின் பக்சார் மாவட்டத்தில் குகுடா கிராமத்தில் விளைநிலம் ஒன்றில் 20 வயது கொண்ட இளம்பெண் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் உறுப்புகள் கடுமையாக தீக்காயம் அடைந்துள்ளன. அவரது தலையில் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போயுள்ளது.
கொல்லப்படுவதற்கு முன் மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. காலில் சாக்ஸ் மற்றும் காலணிகளை அணிந்து நகப்பூச்சு அலங்காரங்கள் செய்துள்ளார்.
அவரை பற்றிய மருத்துவ பரிசோதனையில், கர்ப்பிணி இல்லை என்றும், திருமணம் ஆகாதவராகவோ அல்லது திருமணம் முடிந்த புதுப்பெண்ணாகவோ இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணை தீ வைத்து எரிக்க வைக்கோலை பயன்படுத்திய மர்ம நபர்கள் சான்றுகளை அழிக்க முயன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதுபற்றி எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள எம்.எல்.ஏ. மனேர் பாய் பீரேந்திரா கூறும்போது, குற்றவாளிகள் சுதந்திரமுடன் திரிகின்றனர். ஆனால் முதல் மந்திரி நிதீஷ் குமார் தேர்தல் யாத்திரை சென்றுள்ளார் என குற்றச்சாட்டினார்.
Related Tags :
Next Story