ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:10 AM GMT (Updated: 5 Dec 2019 10:10 AM GMT)

ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் நேற்று ஜாமீனில் விடுதலையானார்.  

இந்தநிலையில் விடுதலையான மறுநாளான இன்று நாடாளுமன்றம் வந்தார். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர். ப.சிதம்பரமும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது அவர், மத்திய அரசு மீதும் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

இந்த நிலையில், ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும் போது, “ ப.சிதம்பரம் சிறையில்  இருந்து வெளிவந்த முதல் நாளே ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளார். 

வழக்கு தொடர்பாக எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கக்கூடாது என்ற நிபந்தனையை ஜாமீனில் கூறியிருந்தது.  ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்த முதல் நாளிலேயே, எந்த பொது கருத்தும் தெரிவிக்க கூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார்” என்றார்.

Next Story