நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி; மும்பை நீதிமன்றம் அறிவிப்பு


நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி; மும்பை நீதிமன்றம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:25 AM GMT (Updated: 5 Dec 2019 10:25 AM GMT)

நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மும்பை,

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். 

அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த  மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.  இதனிடையே ஐந்தாவது முறையாக ஜாமீன்  வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்தது. 

இந்தநிலையில், நிரவ் மோடியின் வங்கி பணமோசடி வழக்கு தொடர்பான  விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடனை செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார  குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story