ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது


ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2019 9:11 PM GMT (Updated: 6 Dec 2019 9:11 PM GMT)

ஐதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத் அருகே பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், நேற்று அதிகாலை போலீஸ் ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரில் ஒருவருடைய பெயர் சென்னகேசவலு. லாரி டிரைவரான இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் ரேணுகா.

அவர் நிருபர்களிடம் பேசுகையில், “எனது கணவருக்கு ஒன்றும் ஆகாது என்றும், விரைவில் திரும்பி வந்து விடுவார் என்றும் சொன்னார்கள். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் கணவர் இறந்த பிறகு எனக்கு ஒன்றும் இல்லை. அவரை சுட்டுக்கொன்ற இடத்துக்கு போலீசார் என்னையும் அழைத்துச் சென்று சுட்டுக்கொல்ல வேண்டும்” என்று வேதனையுடன் கூறினார்.

சென்னகேசவலு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

மற்றொரு லாரி டிரைவரான முகமது ஆரீப், ஜாக்லர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் வேதனையுடன் கூறுகையில், “என் மகன் போய்விட்டான், சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது” என்று கண் கலங்கினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட லாரி கிளனர் ஜொள்ளு சிவா, குடிகண்ட்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜொள்ளு ராமப்பா கூறுகையில், “என் மகன் குற்றம் செய்து இருக்கலாம். அதற்காக அவனுக்கு இப்படி ஒரு முடிவை ஏற்படுத்தி இருக்க வேண்டாம்” என்று கண்கலங்க தெரிவித்தார்.


Next Story