இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு


இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் - போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2019 11:00 PM GMT (Updated: 8 Dec 2019 9:28 PM GMT)

நாட்டுக்கு மிகவும் உகந்தாற்போல், இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்களின் போலீஸ் டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு, மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆகியோர் தனித்தனியாக கலந்து கொண்டனர்.

மாநாட்டில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி, தேச பாதுகாப்பு குறித்து கொள்கைகளை வகுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போலீஸ் துறை நல்ல பணிகளை செய்து வருகிறது.

தற்போதைய ஜனநாயக கட்டமைப்பிலேயே நாட்டுக்கு மிகவும் உகந்தவகையில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய மோடி அரசு உறுதி பூண்டுள்ளது.

மேலும், அகில இந்திய போலீஸ் பல்கலைக்கழகமும், அகில இந்திய தடய அறிவியல் பல்கலைக்கழகமும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றுக்கு மாநிலங்களில் உறுப்பு கல்லூரிகளும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நீதி விரைவாக கிடைக்கும் வகையில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய யோசனைகளை அனுப்பி வைக்குமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் கேட்டுக்கொண்டது. அந்த பின்னணியில், அமித் ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.

கற்பழிப்பு போன்ற கொடிய குற்ற வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைப்பதில்லை என்ற மனக்குறை சமீபகாலமாக நிலவி வருகிறது. அதற்கேற்ப சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.

Next Story