மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது


மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 7:52 PM GMT (Updated: 10 Dec 2019 7:52 PM GMT)

மனைவியை கொன்று உடலை கூறு போட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு வாரமாக ‘பிரிட்ஜ்’க்குள் வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் மஜல்காவ் தாலுகா அசோக்நகரில் உள்ள ஒரு சாக்கடையில் நேற்றுமுன்தினம் மனித உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை ஆராய்ந்தனர். அதில் அதிகாலை நேரத்தில் ஆசாமி ஒருவர் கையில் வாளி மற்றும் இரு குழந்தைகளுடன் அந்த சாக்கடை அருகே நின்று கொண்டிருந்த காட்சி பதிவாகி இருந்தது.

அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின்போது, ஒரு வாரத்திற்கு முன்பாகவே தனது மனைவி ரேஷ்மா பதானை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டு வீட்டில் உள்ள பிரிட்ஜ்க்குள் வைத்து இருந்ததாகவும், நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் தனது குழந்தைகளுடன் வந்து சாக்கடையில் உடல் பாகங்களை வீசி சென்றதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

மும்பையில் தந்தையை கொன்று உடலை கூறுபோட்டு சூட்கேசில் அடைத்து வீசியதாக வளர்ப்பு மகளையும், கல்யாண் பகுதியில் மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தந்தையையும் போலீசார் கைது செய்து இருந்தனர். தற்போது பீட் அருகே நடந்த சம்பவத்தால் மராட்டியத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த கொடூரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story