அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்


அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 10 Dec 2019 8:38 PM GMT (Updated: 10 Dec 2019 8:38 PM GMT)

சிவகளை, கொடுமணல் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பாலு எம்.பி.யின் கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.

புதுடெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதா? சிவகளை பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? சென்னிமலை தாலுகா கொடுமணல் பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமா? என நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

2003-04, 2004-05-ம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஆய்வறிக்கைகள் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளன. கி.மு. 600-ம் நூற்றாண்டை சார்ந்த சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன பானை பொருட்களும், பல்வேறு சித்திரங்களுடன் கூடிய கலைப் பொருட்களும், இரும்பிலான அம்புகள், கத்தி, வளையல்கள், கல் மணிகள் போன்ற அரிய பொருட்களும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்றுள்ளன.

‘சிவகளை மற்றும் கொடுமணல் ஆய்வுகளுக்கு மத்திய அரசிடம் திட்டம் இல்லை. ஆனால் தமிழக அரசின் தொல்லியல்துறைக்கு சிவகளை, கொடுமணல் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story