குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்


குடியுரிமை சட்ட திருத்த மசோதா ; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
x
தினத்தந்தி 11 Dec 2019 5:42 AM GMT (Updated: 11 Dec 2019 5:58 AM GMT)

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில், பாகிஸ்தான் பேசுவதை போலவே இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன என பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

கடந்த திங்கட்கிழமை மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில், இன்று  இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. குடியுரிமை மசோதாவுக்கு  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

வடகிழக்கு மாநிலங்களிலும் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை மசோதா, வடகிழக்கு மக்கள் மீது நடத்தப்படும் கிரிமினல் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடினார். 

மாநிலங்களவையில், குடியுரிமை மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம் பாராளுமன்றத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக எம்.பிக்கள் கலந்து கொண்டனர். 

பாஜக எம்.பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ” குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். குடியுரிமை மசோதா விவகாரத்தில் பாகிஸ்தான் பேசுவதை போல இங்குள்ள சில கட்சிகள் பேசுகின்றன” என்று கூறியதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. 

Next Story