குடியுரிமை சட்ட திருத்த மசோதா: இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - அமித்ஷா


குடியுரிமை சட்ட திருத்த மசோதா: இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - அமித்ஷா
x
தினத்தந்தி 11 Dec 2019 2:22 PM GMT (Updated: 11 Dec 2019 2:22 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல என்று மத்திய உள்துறைமந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தநிலையில்  இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார். 

அவர் பேசுகையில், தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதாவிற்கு தேவை இருந்திருக்காது

வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன.  இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்கள் துன்புறுத்தப்பட வாய்ப்புகள் குறைவு.

மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது ஏன்? அதற்கு காங்கிரஸ் எப்படி ஒப்புக்கொண்டது. 

குடியுரிமை சட்ட மசோதா குறித்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தவறான கருத்துகளை பரப்புகிறார். காங்கிரஸ் எதை செய்தாலும் அது மதச்சார்பின்மை எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story