குடியுரிமை மசோதாவை கடலில் எறியுங்கள்: இலங்கை அகதிகள் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை - மாநிலங்களவையில் வைகோ பேச்சு


குடியுரிமை மசோதாவை கடலில் எறியுங்கள்: இலங்கை அகதிகள் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை - மாநிலங்களவையில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:00 PM GMT (Updated: 11 Dec 2019 9:22 PM GMT)

இலங்கை அகதிகள் பற்றி மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றும், குடியுரிமை மசோதாவை வங்கக்கடலில் தூக்கி எறியுங்கள் என்றும் மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் வைகோ எம்.பி. பேசியதாவது:-

மக்களாட்சி கோட்பாடுகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். இந்த மசோதா சமூகத்தின் ஒரு பிரிவினரை எதிரிகளாக காட்ட முனைகின்றது. சுருக்கமாக பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என வரவேற்கின்றது.

ஆனால் நீண்ட காலமாக இந்தியாவில் இருக்கிற இலங்கை யில் இருந்து வந்த தமிழர்கள், மியான்மர் நாட்டில் இருந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து இந்த மசோதாவில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் அண்டை நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிற ஷியா மற்றும் அகமதியா முஸ்லிம்கள், இந்தியாவில் குடியுரிமை கோருவதை இந்த திருத்தம் தடை செய்கிறது.

இது சமத்துவத்துக்கு எதிரான தாக்குதல். மதச்சார்பின்மைக்கு எதிரான தாக்குதல். மக்களாட்சி கோட்பாட்டின் மீதான தாக்குதல். எனவே இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விற்பன்னர்கள், அறிவியல், ஆராய்ச்சி அறிஞர்கள் இந்த சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து இருப்பதுடன், உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் குடியுரிமையை பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இலங்கை அதிபரோடு கைகுலுக்கி, கொஞ்சி குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களை பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. இந்த மசோதாவை வங்கக்கடலில் தூக்கி எறியுங்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேறவில்லை; சண்டையிட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது இனப்படுகொலைக்கு ஆளாகி, மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டுக் காயம்பட்டு நிற்கும் தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் நச்சுக்கருத்துருவாக்கமாகும். தமிழர்களது இன விடுதலைப்போராட்டம் குறித்தும், 2 லட்சம் தமிழர்களைக் கொன்ற சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தும் பா.ஜ.க. கொண்டிருக்கிற அபத்தப்பார்வை இதன்மூலம் தெளிவாக விளங்கும்.

ஆகவே, தமிழர்களை புறக்கணித்தும், இஸ்லாமிய மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடும், அவர்களைத் தனிமைப்படுத்தி நாடற்றவர்களாக மாற்ற முனையும் குறிக்கோளோடும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மாநிலக் கட்சிகள் வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசு இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story