மேகாலயாவில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம், ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு


மேகாலயாவில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம், ஷில்லாங்கில் ஊரடங்கு உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2019 3:49 AM GMT (Updated: 13 Dec 2019 3:49 AM GMT)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் பெற்று வருகிறது.

ஷில்லாங்,

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி அந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

குடியுரிமை சட்டம் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10-ந் தேதி முதல் பெரும் போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு வரை தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத பிற மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்தால், அது பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இந்த மாநிலங்களில் கருதுகிறார்கள்.

அசாம் மாநிலத்தில் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கவுகாத்தி நகரில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் மக்கள் அதை மீறி நேற்றும் போராட்டங்களை தொடர்ந்தனர். மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. கவுகாத்தியில் பல இடங்களில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மட்டும் 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது

லக்கிம்பூர், டின்சுகியா, திப்ருகார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான விமான சேவைகள், ரெயில் சேவைகள் ரத்தாகின. கவுகாத்தி, டின்சுகியா, ஜோர்ஹாட், திப்ருகார் உள்ளிட்ட இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் இணைய சேவை முடக்கம்

மேகாலயா மாநிலத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிராக தொடர்ந்து  போராட்டங்கள் நடந்து வருகின்றன.  பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.  

இதனால், மேகாலாயாவில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை மற்றும் செல்போன் குறுஞ்செய்தி சேவை முடக்கப்பட்டுள்ளது. ஷில்லாங்கில் சில இடங்களில் காலவரையின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஷில்லாங்கில் இருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள  வில்லியம் நகர் டவுன் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மாநில முதல் மந்திரி கான்ராட் சங்மாவுக்கு  உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேகலயா மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதற்கிடையே முதல்-மந்திரி கன்ராட் சங்மா தலைமையிலான பிரதிநிதிகள் குழு டெல்லி விரைந்துது. இந்த குழு, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து, குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து மேகாலயா மாநிலத்துக்கு முழுமையான விலக்கு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தத உள்ளது.
 

Next Story