குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2019 11:15 PM GMT (Updated: 13 Dec 2019 8:37 PM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா ஆகியோர் சார்பிலும் மற்றும் அகில அசாம் மாணவர்கள் சங்கம், ரிகாய் மஞ்ச் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மகுவா மொய்த்ரா சார்பில் அவரது வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, மொய்த்ராவின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது வருகிற 16-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி, இது தொடர்பாக வழக்குகளை பட்டியலிடும் அதிகாரியை அணுகுமாறு அவரை கேட்டுக்கொண்டார்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story