குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு: சமூக ஊடகங்களில் போலி செய்திகளுக்கு எதிராக ராணுவம் எச்சரிக்கை


குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு: சமூக ஊடகங்களில் போலி செய்திகளுக்கு எதிராக ராணுவம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Dec 2019 8:19 AM GMT (Updated: 14 Dec 2019 8:19 AM GMT)

குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பு: சமூக ஊடகங்களில் போலி செய்திகள் வெளியிடுபவர்களுக்கு எதிராக ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி,

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.

இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

அசாமில் ராணுவம் முகமிட்டு உள்ளது. அசாமில் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டாலும் பிராந்தியத்தில் முகாமிட்டு உள்ள  இராணுவம் மற்றும் துணை ராணுவம் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் தடுக்க கவுகாத்தியில்  வழக்கமான அணிவகுப்பு மற்றும் கண்காணிப்புகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

வடகிழக்கு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக சிலர் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் இன்று  மக்களிடம் ஒரு ஆலோசனை ஒன்றை தனது அதிகார பூர்வ ட்விட்டரில் வெளியிட்டு உள்ளது. 

பொய் பிரசசாரங்களைத் தவிர்க்கவும். சில தீங்கு விளைவிக்கும் செய்திகள், தவறான பிரசாரங்கள்  சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. பொய்யான வதந்திகளைத் தவிர்க்கவும், பொய்யான செய்திகளைக் கேட்க வேண்டாம், அதில் கவனம் செலுத்தவும் வேண்டாம்- இந்திய இராணுவம் என் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story