இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது


இளம்பெண்ணை கற்பழித்து உயிருடன் எரித்ததால் பரபரப்பு - பக்கத்து வீட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2019 9:30 PM GMT (Updated: 15 Dec 2019 8:41 PM GMT)

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதேப்பூர்,

உத்தரபிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உபிபூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த மேவலால் என்பவர் திடீரென இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார்.

பின்னர் அவர் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். அத்துடன் நில்லாமல் இளம்பெண்ணின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடினார். இதனால் அலறிய இளம்பெண்ணின் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு உயிருக்கு போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீத தீக்காயம் அடைந்ததால் இளம்பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மேவலாலை நேற்று முன்தினம் மாலையில் கைது செய்தனர். மேலும் கூடுதல் டி.ஜி.பி. சுஜீத் பாண்டே உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

உத்தரபிரதேசத்தின் உன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அதே கும்பலால் சமீபத்தில் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் அது போன்றதொரு சம்பவம் நடந்திருப்பது உத்தரபிரதேசத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் பதேபூர் சம்பவத்துக்கு போலீசார் வேறொரு காரணம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், பக்கத்து வீட்டை சேர்ந்த நபரும் தூரத்து உறவினர்கள். அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் பெண் வீட்டார் சம்மதிக்காததால் பஞ்சாயத்தினர் கூடி நேற்று முன்தினம் இருவரையும் பிரித்து வைத்தனர். இதனால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்வதற்காக தனது வீட்டுக்குள் சென்று மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்” என்று தெரிவித்தனர்.

இந்த கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் கூறினர்.

இதற்கிடையே, கணவருடன் பணியாற்றும் நபர் உள்ளிட்டவர்களால் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் நடந்து உள்ளது. அங்குள்ள கலாகண்டி மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரின் கணவர் கோவாவில் பணியாற்றி வருகிறார்.

அவர் தன்னுடன் பணியாற்றும் ஒருவரிடம் சில பொருட்களை தனது வீட்டுக்கு கடந்த 11-ந்தேதி கொடுத்து அனுப்பினார். அதை கொடுப்பதற்காக அந்த நபரும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அன்று இரவில் அங்கேயே அவர் தங்கினார். பின்னர் மறுநாள் காலையில் அந்த இளம்பெண் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு செல்ல தயாரானார்.

அப்போது அந்த நபர், இளம்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஏ.டி.எம். மையத்துக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக்கொண்டு இளம்பெண்ணை கடத்தி சென்றார். பின்னர் மறைவான இடத்தில் அந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து கற்பழித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கற்பழித்த 3 பேரையும் தற்போது கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story