அயோத்தியில் 4 மாதங்களுக்குள் பிரமாண்ட ராமர் கோவில் - அமித்ஷா தகவல்


அயோத்தியில் 4 மாதங்களுக்குள் பிரமாண்ட ராமர் கோவில் - அமித்ஷா தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2019 12:16 PM GMT (Updated: 16 Dec 2019 9:18 PM GMT)

அயோத்தியில் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்ட ராமர் கோவில் 4 மாதங்களுக்குள் கட்டப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

பாகூர்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து அதற்கான பணிகளில் இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. அதற்கான அறிவிப்பை உலக இந்துக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், அயோத்தியில் 4 மாதங்களுக்குள் கோவில் கட்டப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் பாகூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அயோத்தி ராம ஜென்மபூமியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கை ஆகும். தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி அயோத்தியில் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்ட ராமர் கோவில் ஒன்று 4 மாதங்களுக்குள் கட்டப்படும் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை வணங்குகிறேன். ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு அளித்த மிர் ஜப்பாரை போல இன்றும் பல துரோகிகள் உள்ளனர். அவர்களை நீங்கள் அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டு, 56 அங்குல மார்பு வலிமை கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும். நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் அவரால் மட்டுமே முடியும்.

ஜார்கண்ட் தனி மாநிலத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை வீரச்சாவுக்கு தள்ளியவர்கள் காங்கிரசும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும்தான். ஆனால் அன்றைய வாஜ்பாய் அரசுதான் தனிமாநிலம் அமைத்தது. ஆனால் தனி மாநிலத்துக்காக போராடிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இன்று காங்கிரசுடன்தான் கூட்டணி வைத்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ள ஹேமந்த் சோரன் வெட்கப்பட வேண்டும்.

ஜார்கண்டின் வளர்ச்சி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜனதா அரசுகள் ஜார்கண்ட் மாநிலத்துக்கு செய்த வளர்ச்சிப்பணிகள் குறித்த கணக்கை என்னால் வழங்க முடியும்.

நான் மட்டுமல்ல பா.ஜனதாவின் இளைஞரணி தலைவரோ அல்லது தொண்டரோ கூட இந்த பட்டியலை வழங்க முடியும். ஆனால் நீங்கள் (ராகுல்) இத்தாலி கண்ணாடியை அணிந்திருப்பதால் அவை உங்களுக்கு தெரியாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Next Story