டெல்லி வன்முறை; 'பீம் சேனை' தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்


டெல்லி வன்முறை; பீம் சேனை தலைவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
x
தினத்தந்தி 21 Dec 2019 2:12 PM GMT (Updated: 21 Dec 2019 2:12 PM GMT)

டெல்லி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட பீம் சேனை தலைவரை 14 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ‘பீம் சேனை’ என்ற அமைப்பு சார்பில் நேற்று  ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடந்தது. இந்த பேரணியை டெல்லி கேட் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், பீம் சேனை அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை தீ வைத்து எரித்தனர். மேலும் சில வாகனங்களை சேதப்படுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர்.

மேலும் இந்த பேரணியை தலைமை தாங்கி நடத்திய பீம் சேனை தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி, ஜும்மா மசூதிக்குள் சென்று ஒளிந்து கொண்டார். தொடர்ந்து போலீசாருக்கு போக்கு காட்டி வந்த அவர்,  இன்று அதிகாலையில் மசூதியில் இருந்து வெளியே வந்தார். 

உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சந்திரசேகர் ஆசாத் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, டெல்லி திஹார் சிறையில் அவர்  அடைக்கப்பட்டார்.

Next Story