ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்பு


ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:33 PM GMT (Updated: 24 Dec 2019 4:33 PM GMT)

ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்கிறார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது.  81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது.  இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.  இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதன் முடிவில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜனதா, 26 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாணவர் சங்கம், சுயேச்சைகள் ஆகியோர் தலா 2 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மற்றும் கூட்டணியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஜார்கண்டில் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளோம்.  ஜார்கண்டில் ஆட்சி அமைக்க எங்களை அழைக்கும்படி கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.  வருகிற 29ந்தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.

Next Story