சோனியா காந்தியுடன் ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்திப்பு


சோனியா காந்தியுடன் ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்திப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 11:19 AM GMT (Updated: 25 Dec 2019 11:19 AM GMT)

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவிற்கு வரும்படி ஹேமந்த் சோரன் இன்று மாலை அழைப்பு விடுக்கிறார்.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர்தாஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது.  81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  பா.ஜனதா, 26 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாணவர் சங்கம், சுயேச்சைகள் ஆகியோர் தலா 2 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் மற்றும் கூட்டணியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஜார்கண்டில் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளோம்.  ஜார்கண்டில் ஆட்சி அமைக்க எங்களை அழைக்கும்படி கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம்.  வருகிற 29ந்தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறினார்.

இந்நிலையில், சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவிற்கு வரும்படி ஹேமந்த் சோரன் அழைப்பு விடுக்கிறார் என சோரனின் நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

ஜார்கண்டில் கூட்டணி அரசு அமைய உதவியாக, ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமைக்கு நன்றி தெரிவிக்க ஹேமந்த் சோரன் விரும்பியுள்ளார்.  இதனால், ராஞ்சியில் இருந்து புதுடெல்லிக்கு இன்று செல்லும் சோரன், சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார்.  இந்த சந்திப்பில் அவரை டிசம்பர் 29ந்தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

ஹேமந்த் சோரனுடன் ஜார்கண்டிற்கான காங்கிரஸ் நிர்வாகி ஆர்.பி.என். சிங் மற்றும் ஜார்கண்ட் தேர்தலுக்கான ஒருங்கிணைப்பாளர் அஜய் சர்மா ஆகியோரும் செல்கின்றனர்.

Next Story