குடியுரிமை திருத்த சட்டம்: ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்


குடியுரிமை திருத்த சட்டம்: ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால்
x
தினத்தந்தி 27 Dec 2019 10:31 AM GMT (Updated: 27 Dec 2019 11:56 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையாவது பறிக்கும் ஒரு அம்சத்தை காட்டுமாறு ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்து உள்ளார்.

சிம்லா

இமாசல பிரதேசம் சிம்லாவில் நடந்த  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முஸ்லிம் சகோதரர்களின் குடியுரிமை பறிக்கப்படப்போகிறது என்று காங்கிரசும் மற்ற கட்சிகளும்  தவறாக வழிநடத்துகின்றன, வதந்திகளை பரப்புகின்றன என்பதை அனைவருக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கும் சொல்ல விரும்புகிறேன். எந்தவொரு நபரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என்று குறிப்பிடும் எந்தவொரு   விதியையும் தயவு செய்து முன்வைக்குமாறு ராகுல் காந்திக்கு  நான் சவால் விடுகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த சட்டத்தில் யாருடைய குடியுரிமையையும் பறிக்க எந்த  விதியும்  இல்லை. இந்த சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், அது குடியுரிமையை பறிக்காது.

நீங்கள் (காங்கிரஸ்) தயவு செய்து மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் அமைதியை அழிக்க முயற்சிக்காதீர்கள். உங்களிடம் உண்மைகள் இருந்தால், அவற்றை மக்கள் முன் முன்வைக்கவும்.

இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரித்த பின்னர், பாகிஸ்தானில் வாழ விரும்பாத முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் விருப்பம்.

1950 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி  ஆகியோர் இடையே  ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.  அது ஜவஹர்-லியாகத் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. இதில் இரு தலைவர்களும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க ஒப்புக்கொண்டனர்.

மத துன்புறுத்தல்களில் இருந்து தப்பித்து, அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த நாடுகளை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மூலம், நாங்கள் குடியுரிமையை வழங்குகிறோம், அதை பறிக்கவில்லை என கூறினார்.

Next Story