'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கூச்சலிட்டதால் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறினேன் - போலீஸ் அதிகாரி விளக்கம்


பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூச்சலிட்டதால் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறினேன் - போலீஸ் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 28 Dec 2019 10:48 AM GMT (Updated: 28 Dec 2019 10:48 AM GMT)

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று போராட்டக்காரர்கள் சிலர் கூச்சலிட்டதால்தான் அவர்களை 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்று கூறியதாக உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

லக்னோ,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில்  பல நகரங்களில்  கடந்த 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது.  

 உத்தர பிரதேச மாநிலத்தில் லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்  ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் பலியாகினர்.

மீரட் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் அதிகாரி ஒருவர், "பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்துக்குள்ளானது.

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியும், மீரட் எஸ்.பி.யுமான அகிலேஷ் நாராயணன் அளித்துள்ள விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் போலீஸ் மீது கற்களை வீசி "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்றுவிடுங்கள் என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story