ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்தளவிலும் ஏற்க முடியாது; மத்திய மந்திரி பேட்டி
ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்த அளவிலும் ஏற்று கொள்ள முடியாது என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 19ந்தேதி முதல் 21ந்தேதி வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இதேபோன்று லக்னோ, மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் பலியாகினர்.
போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் அதிகாரியும், மீரட் எஸ்.பி.யுமான அகிலேஷ் நாராயணன், "பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்துக்குள்ளானது.
இதுபற்றி அவர் அளித்த விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் போலீஸ் மீது கற்களை வீசி "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள். அதனால், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்று விடுங்கள் என்றுதான் கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இந்த வீடியோ பற்றி கூறும்பொழுது, வீடியோவில் பேசியது போன்று எஸ்.பி. கூறியிருந்தது உண்மை எனில் அது கண்டனத்திற்குரியது. அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போலீசாராலோ அல்லது கும்பலாலோ எந்த அளவிலான வன்முறையும் ஏற்று கொள்ள முடியாதது. ஜனநாயக நாட்டின் ஒரு பகுதியாக அது இருக்காது. ஒன்றுமறியாத மக்கள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதில் போலீசார் கவனம் கொண்டு செயல்பட வேண்டும் என்று நக்வி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story